Wednesday, March 30, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 24/25 பைரவர்

ஸ்ரீ காலபைரவர் - காத்மாண்டு


புகைப்படம் : இணையம்

பெயர்க் காரணம்

பைரவர் என்னும் வட மொழி சொல் பீரு என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டது. இதற்கு அச்சம் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களைக் காப்பவர் என்பது பொருள்.

- (பரணம்) - உலக உயிர்களை தோற்றுவித்து  படைப்புத் தொழில் செய்பவர்
ர் - (ரமணம்) - தோன்றிய உயிர்களைக் காப்பவர்
- (வமணம்) - வலியுடன் வாழ்ந்து சலித்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கிக் கொள்பவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் காலங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அப்படிப்பட்ட காலத்தை இயக்கும் பரம்பொருளே பைரவர் ஆவார்.

பைரவர் சிவபெருமானின் இருபத்து ஐந்து மூர்த்தங்களில் / அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.

சில்ப சாஸ்திரப்படி 64 பைரவர்கள் வகைபடுத்தப்பட்டாலும், 8 பைரவர்கள் திசைக்கு ஒருவராக காவல் புரிகிறார்கள். அசிதாங்க பைரவர்,ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர்,உன்மத்த பைரவர்,கபால பைரவர்,பீஷண பைரவர், ஸம்ஹார பைரவர். இந்த எட்டு பைரவர்களே 64 திருமேனிகளாக விரிவடைகிறார்கள்.

வேறு பெயர்கள்

சிவபெருமானுடைய பஞ்ச குமாரர்களில் ஒருவரான பைரவருக்கு வைரவர், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன்,கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்கள் உண்டு.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும்(வடிவங்களுக்கு ஏற்றவாறு ஆயுதங்கள் மாறும்) நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்

கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரது அவதார தினமாகும்.

பைரவர் தோற்றம்

தோற்ற வகை : 1

அந்தகாசுரன் என்னும் அரக்கன் சிவனை வழிபட்டு இருள் என்ற சக்தியைப் பெற்று உலகை இருள் மயமாக்கி கர்வம் கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டு அவனை அழிக்க வேண்டினார்கள். சிவன் தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக மாற்றினார். எனவே எட்டு சைகளிலும் எட்டு பைரவர்கள் தோன்றினார்கள்.

தோற்ற வகை : 2

ஒரு முறை ப்ரம்மா தனக்கு ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். சிவன் ருத்ரனிடம் ப்ரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்குமாறு கூறினார்இதனால் ப்ரமாவின் கர்வம் நீங்கியது. ப்ரம்மாவின் தலையை எடுத்ததால் பைரவருக்கு ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் சிவன் பைரவரை பூலோகத்தில் சென்று யாசகம்(பிச்சை) எடுக்குமாறு கூறினார். இந்த தோஷம் திருவலஞ்சுழியில் அவருக்கு நீங்கியது.

பூசிக்க உகந்த மலர்கள்

தாமரை, செவ்வரளி, அரளி, வில்வம், தும்பைப்பூ, சந்தனம் செண்பகம், செம்பருத்தி, நாகலிங்கப்பூ,சம்மங்கி (மல்லிகை விலக்க வேண்டும்)

பிடித்த உணவுப் பொருட்கள்

சர்க்கரைப் பொங்கல், உப்பில்லாத தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், செவ்வாழை மற்றும் பல பழவகைகள்

பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்

எல்லா நாட்களுமே பைரவரை வழிபட சிறந்த நாள் என்றாலும் சில தினங்கள் உன்னதமான பலன்களைத் தரும். அதில் அம்மாவாசை, பௌர்ணமி(வெள்ளிக் கிழமையுடன் கூடிய பௌர்ணமி இன்னும் சிறப்பு), தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம் ,

பைரவர் வழிபாட்டின் பலன்கள்

· ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.
·   திருமணத்தடைகள் நீங்கும்
·   சந்தான பாக்கியம் பெறலாம் (குழந்தை)
·   இழந்த பொருள்களையும் சொத்துக்களையும் திரும்பப்பெறலாம்
·   இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிடலாம்.
·   ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்
·   எதிரிகள் தொல்லை நீங்கும்
·   கிரங்களின் தோஷங்கள் மற்றும் பிதுர்தோஷம் நீங்கும்
·   வாழ்வில் வளம் பெருகும்
·   பிறவிப்பிணி அகலும்


இது சிறு குறிப்பு மட்டுமே. பைரவர் பற்றி விரிவாக அறிய திருவாடுதுறை மடத்து பதிப்பில் வெளியாகி இருக்கும் 'மகா பைரவர்' நூலினை வாசிக்கவும்.

4 comments: