Wednesday, February 24, 2016

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


மாணவன்

பிரமாணங்கள் குறித்து இன்னும் விளக்க வேண்டும்.

ஆசிரியர்

குடமாய் தோன்றும் பொருள் முன்பு மண்ணில் இருந்தே தோன்றியது. ஆடையாய் தோன்றும் பொருள் நூலில் இருந்தே தோன்றியது. எனவே சூன்யத்தில் இருந்தோ அல்லாதவற்றில் இருந்தோ எந்தப் பொருளும் தோன்றவில்லை. உள்ள பொருளே நிலை மாறியும் வடிவம் மாறியும் வரும். (Energy cannot be created. One form of energy can be converted to another form of energy – Ex. Kinetic energy to Static energy என்பது சிந்திக்கத் தக்கது.) இதுவே சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை. இதையே 'மருவுசற் காரியத்தாய்' என உமாபதிச் சிவாச்சாரியார் சிவப்பிரகாச நூலில் குறிப்பிடுகிறார்.

மாணவன்

'தோன்றிய பொருள் தோற்றத்திற்கு முன்னும் உள்ளது' என்பதன் பொருள் 'காணப்படாத நுண்நிலையில் உள்ளது' என்பதன் பொருள் உணர்ந்து கொண்டேன்.எனவே உலகத்தை உள் பொருள் எனத் தயங்காது கொள்வேன்.

காரியப் பொருள்களுக்கு கர்த்தா இன்றியமையாதது

மாணவன்

உலகம் நுண் நிலையில் இருந்து பருநிலைக்கு தோன்றுகிறது எனக் கொண்டால் உலகம் உள் பொருள் என்பதற்கும் அது தானாக தோன்றாமல் அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும் என்பது எங்கனம்? '

ஆசிரியர்

இல்லாதது தோன்றாது' என்பது போலவே 'அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்' என்பதே உண்மை.

மண், நூல் ஆகியவை காரணப் பொருள்; குடம், ஆடை போன்றவை காரியப் பொருள். மண், நூல் போன்றவை தானே மாற்றம் கொள்ள இயலாது. அதை கூட்டுவிக்க குயவனும், கோலிகனும் தேவை. எனவே 'உள்ளதாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன' . அதுபோலவே உலகத்தை தோற்றுவித்ததற்கு ஒரு கர்த்தா தேவை.

எனவே ஒரு காரியம் நிகழ்த்தப்பட வேண்டுமாயின் 'முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக்காரணம்' என மூன்றும் தேவை. குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டச் சக்கரம் துணைக் காரணம், குயவன் நிமித்த காரணம். அதுபோலவே உலகத்திற்கு மாயை முதல் காரணம், கடவுளது ஆற்றல் துணைக் காரணம், கடவுள் நிமித்த காரணம்.

No comments:

Post a Comment